கோலி, ராயுடு அரை சதங்கள்: வலுவான நிலையில் இந்திய அணி!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையையும் அவர் எட்டினார்...
கோலி, ராயுடு அரை சதங்கள்: வலுவான நிலையில் இந்திய அணி!

குவஹாட்டியில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இந்நிலையில், விசாகப்பட்டணத்தில் 2-வது ஒருநாள் ஆட்டம் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கலீல் அகமதுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். மே.இ. அணியில் தாமஸுக்குப் பதிலாக ஒபட் மெக்காய் தேர்வாகியுள்ளார். இது அவருடைய அறிமுக ஒருநாள் ஆட்டமாகும்.

கடந்த ஆட்டத்தில் சதமெடுத்த ரோஹித் சர்மா,  இந்தமுறை 4-வது ஓவரில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 1 சிக்ஸர், 4 பவுண்டரிகள் என சுறுசுறுப்பாக விளையாடி வந்த தவன், 29 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதனால் இந்தமுறை இந்திய அணியின் நடுவரிசைக்கு ஒரு பொறுப்பு ஏற்பட்டது. நான்காம் நிலை வீரராகக் களமிறங்கிய ராயுடு விராட் கோலிக்கு நல்ல இணையாக விளங்கினார். பந்துகளை வீணடிக்காமல் விளையாடி வந்த விராட் கோலி, 56 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். இது அவருடைய 49-வது ஒருநாள் அரை சதம். மேலும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையையும் அவர் எட்டினார். இதற்கு முன்பு 39 இன்னிங்ஸில் 1573 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை கோலி இன்று தாண்டியுள்ளார். இந்த இலக்கைத் தாண்ட கோலிக்கு 29 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டுள்ளன. இதன்பிறகு ராயுடுவும் 61 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இது அவருடைய 9-வது ஒருநாள் அரை சதமாகும். 

இந்திய அணி 27-வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 53, ராயுடு 54 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com