தில்லியில் நடைபெற்ற தியோதர் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றில் ரஹானேவின் இந்தியா சி அணி வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது.
டாஸ் வென்ற இந்தியா சி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்குச் சிறப்பாக விளையாடிய ரஹானேவும் இஷான் கிஷனும் பலமான கூட்டணி அமைத்து 31 ஓவர்கள் வரை விளையாடி 210 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். 87 பந்துகளில் 114 ரன்கள் குவித்த இஷான் கிஷன் முதலில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் சூர்யகுமார் யாதவ், 18 பந்துகளில் 4 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்து அசத்தினார். கேப்டன் ரஹானே, 156 பந்துகளில் 144 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 40 ஓவர்கள் வரை சற்று நிதானமாக விளையாடிய ரஹானே, கடைசி 10 ஓவர்களில் 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.
50 ஓவர்களில் இந்தியா சி அணி, 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது. உனாட்கட் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்திய டி20 அணிக்குத் தேர்வாகியுள்ள ஷபாஸ் நதீம், 10 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 62 ரன்கள் கொடுத்தார்.
கடினமான இலக்கை ஓரளவு நன்கு எதிர்கொண்டது இந்தியா பி அணி. 21-வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. தொடக்க வீரர் கெயிக்வாட் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஸ்ரேயஸ் ஐயர் தவிர இதர பேட்ஸ்மேன் யாரும் பெரிய ஸ்கோர் எடுத்து அணிக்கு உதவவில்லை. விஹாரியும் திவாரியும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். பெயின்ஸ் 37 ரன்கள் கொடுத்து ஸ்ரேய்ஸுக்கு நல்ல இணையாக விளங்கினார். ஒருகட்டத்தில் ஸ்ரேய்ஸ் விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி நிச்சயம் என்கிற நிலைமை உருவானது. அவர் 43-வது ஓவரில் 114 பந்துகளில் 8 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 148 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா பி அணி, 46.1 ஓவர்களில் 323 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சி தரப்பில் பப்பு ராய் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தியோதர் கோப்பை இறுதிச்சுற்றில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ரஹானே தலைமையிலான இந்தியா சி அணி.