யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் முன்னணி டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் காயம் காரணமாக விலகினார்.
யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிகள் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதன் முதல் அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலும், ஆர்ஜென்டினா வீரர் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவும் மோதினர்.
இதில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல் போட்ரோ முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார். இதனிடையே நடாலுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சிறிது சிகிச்சை மேற்கொண்டார். அதன்பிறகு காயத்துடனே அவர் 2-ஆவது செட்டை எதிர்கொண்டார். 2-ஆவது செட்டை டெல் போட்ரோ 6-2 என கைப்பற்றினார். இதையடுத்து, காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக நடால் அறிவித்தார். இதன்மூலம், டெல் போட்ரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜப்பானின் நிஷிகோரி ஆகியோர் மோதினர். இதில், ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்கிற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம், 10-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஜோகோவிச் - டெல் போட்ரோ ஆகியோர் மோதவுள்ளனர்.