ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு நாடுகளின் துபை, அபுதாபி நகரங்களில் தொடங்கியுள்ளது. வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கின்றன.
இப்போட்டியை நடத்தும் உரிமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குக் கிடைந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட முடியாத நிலை உள்ளது. இதனால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2018 நடத்தும் உரிமையை ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு வழங்கியது பிசிசிஐ.
இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் என மூன்று அணிகள் குரூப் ஏ பிரிவிலும் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றன. லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறியுள்ளன.
துபையில் நடைபெறுகிற ஆசியக் கோப்பைப் போட்டியின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவும் வங்கதேசமும் இன்று மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறுகிற மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தானும் வங்கதேசமும் மோதுகின்றன.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. பாண்டியாவுக்குப் பதிலாக ஜடேஜா இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். சிறிது இடைவெளிக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணிக்குள் நுழைந்துள்ள ஜடேஜாவுக்கு உடனடியாக வாய்ப்பை வழங்கியுள்ளார் ரோஹித் சர்மா.