2-வது ஒரு நாள் ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்தியா

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியா
2-வது ஒரு நாள் ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்தியா


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியா முனைந்துள்ளது.
குவஹாட்டியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அபாரமான பார்மில் ஆடும் நிலையில் புதன்கிழமை இரண்டாவது ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
மேற்கிந்திய தீவுகள் அணி முதல் ஆட்டத்தில் 322 ரன்களை குவித்தாலும், அந்த ஸ்கோரை 42 ஓவர்களிலேயே இந்திய அணி அடைந்து பிரம்மாண்டமான வெற்றியை அடைந்தது. 
கோலி, ரோஹித் ஆகியோர் இந்த ஆட்டத்தில் புதிய சாதனைகளை படைக்க காத்துள்ளனர். 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. 
50 ஓவர் ஆட்டத்தில் தற்போதுள்ள தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக கோலி, ரோஹித் ஆகியோர் திகழ்கின்றனர். 8 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இந்தியா வெற்றி பெற்றது, மே.இ.தீவுகள் அணிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பந்துவீச்சை சமாளித்து பெரிய ஸ்கோரை அந்த அணி எடுத்தாலும், இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டம் அதை விழலுக்கு இறைத்த நீர் போலாக்கி விட்டது.
அதே நேரத்தில் சிக்கல் நிறைந்த இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் நிலைமை குறித்து முழுமையாக கண்டறியப்படவில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே ஆட்டத்தை நிறைவு செய்து விடுகின்றனர். வரும் 2019-இல் உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு ஆடும் வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார் போன்ற நம்பத்தகுந்த பெளலர்கள் இல்லாத நிலையில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு தடுமாற்றதுடன் காணப்படுகிறது. மிடில் ஓவர்களில் ரவீந்திர ஜடேஜாவும் சரிவர வீசவில்லை. ஆசியக் கோப்பையில் சிறப்பாக ஆடியதால் அணியில் மீண்டும் இடம் பெற்ற ஜடேஜா, முதல் ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கினார். எனினும் ஆல்ரவுண்டராக உள்ள நிலையில் அவர் அணியில் தொர்கிறார்.
உமேஷ் யாதவும் ரன்களை அதிகம் அள்ளிக் கொடுத்தார். பெளலிங்கில் உமேஷ் யாதவ் சரியான திசையில் பந்துவீசாமல் இருப்பது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 2019 உலகக் கோப்பை போட்டிக்காக ஒரு பந்துவீச்சாளர்கள் பிரிவை ஏற்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 
விசாகப்பட்டினம் போட்டியில் குல்தீப் யாதவ் இடம் பெறுவார் எனத்தெரிகிறது. 
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் ஷிம்ரன் ஹெட்மயர் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். கீய்ரன் பொவலும் துவக்கத்தில் சிறப்பாக ஆடினார். நட்சத்திர வீரர் மார்லன் சாமுவேல்ஸ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். கேப்டன் ஹோல்டரும் மிடில் ஆர்டரில் நம்பிக்கை தரும் வகையில் ஆடுகிறார்.
அந்த அணியின் பந்துவீச்சு ஹோல்டர், தேவேந்திர பிஷு ஆகியோரை நம்பி உள்ளது. டெஸ்ட் தொடரில் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச் மீண்டும் இடம்பெற்றுள்ளது கூடுதல் பலமாகும். 
இதுதொடர்பாக கேப்டன் ஹோல்டர் கூறியதாவது:
323 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தும் எங்கள் அணி தோல்வியைத் தழுவியது. இதற்கு சீரான பந்துவீச்சு இல்லாததே காரணம். புதிய பந்தில் விக்கெட்டுகளை அவ்வப்போது வீழ்த்தினால் தான் வெற்றி பெற முடியும். ஒரு நாள் ஆட்டத்தில் புதிய பந்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். புதிய பந்தின் மூலம் மேலும் சில விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆனால் எங்களால் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது. விக்கெட் எடுத்தால், இந்திய மிடில் ஆர்டருக்கு சிக்கல் உண்டாக்கலாம்.
குவாஹாட்டியில் 322 ரன்கள் என்பது குறைவானது. 340 அல்லது 350 எடுத்திருக்க வேண்டும். பேட்டிங்கிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உலகக் கோப்பை நெருங்குவதால் அனைவருக்கும் வாய்ப்பு தரப்பட்டு சோதனை செய்கிறோம் என்றார்.

அணிகள்
இந்தியா

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே, தோனி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப் யாதவ், சமி, கலீல் அகமது, உமேஷ் யாதவ்,
கே.எல்.ராகுல்.

மே.இ.தீவுகள்
ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்),
பேபியன் ஆலன், சுனில் அம்ப்ரீஸ், தேவேந்திர பிஷு, 
சந்தர்பால் ஹேம்ராஜ், ஷிம்ரன் ஹெட்மயர்,ஷேய் ஹோப்,
அஸாரி ஜோசப், எவின் லெவிஸ், ஆஷ்லி நர்ஸ், கீமோ பால், ரோவ்மன் பொவல், கெமர் ரோச், மார்லன் சாமு, ஓஷேன் தாமஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com