ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன், பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக குல்பாதின் நைப் ஒருநாள் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
31 வயது அஸ்கர் ஆப்கன் கடந்த நான்கு வருடங்களாக ஆப்கானிஸ்தானின் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளுக்கு கேப்டனாக இருந்தார். இந்நிலையில் அவருக்குப் பதிலாக மூன்று புதிய கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒருநாள் அணிக்கு குல்பாதின் நைப் கேப்டனாகவும் ரஷித் கான் துணை கேப்டனாகவும் இருப்பார்கள். டெஸ்ட் அணிக்கு ரஹ்மத் ஷா கேப்டனாகவும் ஷாகிதி துணை கேப்டனாகவும் இருப்பார்கள். டி20 அணிக்கு ரஷித் கான் கேப்டனாகவும் ஷஃபிகுல்லா துணை கேப்டனாகவும் இருப்பார்கள். மூன்று கேப்டன்களும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அஸ்கர் ஆப்கன் அணியில் நீடிப்பார். அவர் இளம் கேப்டன்களுக்கு நல்ல ஆலோசகராக இருப்பார். உலகக் கோப்பைப் போட்டியில் புதிய கேப்டனை அறிமுகப்படுத்தினால் அது சரியாக இருக்கும் என்று தோன்றியது என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஃபஸ்லி கூறியுள்ளார்.