இந்திய கிரிக்கெட்டை கடவுள் தான் காப்பாற்றவேண்டும் என்று வேதனைப்படுகிறார்கள் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியும் ஹர்பஜன் சிங்கும். காரணம்?
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமி (என்சிஏ)யின் தலைவராக பிரபல வீரரும், 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் திராவிட் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் சஞ்சய் குப்தா அளித்த புகாரின் அடிப்படையில் பிசிசிஐ நெறிமுறைகள் அலுவலரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான டிகே. ஜெயின், ராகுல் டிராவிடுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்தப் புகாரில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமி (என்சிஏ)யின் தலைவராக உள்ள ராகுல் டிராவிட், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். இதன்மூலம் அவர் இரட்டை ஆதாயம் அடைகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கு இரு வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி ராகுல் டிராவிடுக்கு ஜெயின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்த செய்தியைப் பகிர்ந்து கங்குலி ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
இந்திய கிரிக்கெட்டில் இதுபோன்று புகார் அளிப்பது புதிய ஃபேஷனாகிவிட்டது. இரட்டை ஆதாயம். இதன்மூலம் செய்திகளில் இடம்பெறலாம். கடவுள் தான் இந்திய கிரிக்கெட்டைக் காப்பாற்றவேண்டும் என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
கங்குலிக்கு ஆதரவாக ஹர்பஜன் சிங்கும் தன்னுடைய ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது: நிஜமாகவா? இது எங்குப் போய் முடியும் எனத் தெரியவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு டிராவிடை விடவும் சிறந்த வீரர் ஒருவர் கிடைக்கமாட்டார். இவரைப் போன்ற ஜாம்பவான்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும். கிரிக்கெட்டுக்கு அவர்களுடைய சேவை அவசியம். ஆமாம். கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டைக் காப்பாற்றவேண்டும் என்று கூறியுள்ளார்.