2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள் பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே 81, ரவீந்திர ஜடேஜா 58 ரன்கள் சேர்த்தனர். மே.இ.தீவுகள் தரப்பில் கெமர் ரோச் 4, கேப்ரியல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய மே.இ.தீவுகள் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 48, கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 39 ரன்கள் சேர்த்தனர். அபாரமாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இந்நிலையில், 75 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே, டெஸ்ட் அரங்கில் 10-ஆவது சதத்தை பதிவு செய்தார். 242 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 102 ரன்கள் குவித்தார்.
7 ரன்களில் முதல் சதமடிக்கும் வாய்ப்பை இழந்த ஹனுமா விஹாரி 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 93 ரன்களும், கேப்டன் விராட் கோலி 51 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். ராஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 419 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியின் திரும்பினர். ஒரு கட்டத்தில் 50 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் தத்தளித்தது. பின்னர் கெமர் ரோச் 38 ரன்கள் சேர்க்க அந்த அணி 100 ரன்களுக்கு சுருண்டது. பும்ரா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இஷாந்த் 3, ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது. துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.