ஆஸ்திரேலிய அணி தற்போது டி20, ஒருநாள் தொடர்களில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்துள்ளது. டி20 தொடரை 2-0 என கைப்பற்றி விட்டது. இதன் தொடர்ச்சியாக 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் ஹைதராபாத்தில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ராயுடு, ஜடேஜா, குல்தீப் யாதவ், விஜய் சங்கர் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.
சமீபகாலமாக சரியாக விளையாடாத ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச், ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த கவாஜா ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிறகு ஸ்டாய்னிஸும் நன்கு விளையாடி பவுண்டரிகள் அடித்தார். இதனால் ஆஸி. அணிக்கு நல்ல கூட்டணி கிடைத்தது. இவர்களை 20-வது ஓவரில்தான் பிரிக்கமுடிந்தது. ஜாதவ் பந்துவீச்சில் ஸ்டாய்ன்ஸ் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். 74 பந்துகளில் அரை சதத்தை எட்டிய கவாஜா மேலும் ரன் எதுவும் சேர்க்காமல் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் விஜய் சங்கரின் அற்புதமான கேட்சினால் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஹாண்ட்ஸ்காம்ப் 19 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. மேக்ஸ்வெல் 34, டர்னர் 11 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.