ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்தேனா?: கோமதி மாரிமுத்து பதில்!

ஊக்க மருந்துச் சோதனையில் தான் தோல்வியடைந்ததாக வெளியான செய்தியை மறுத்துள்ளார் கோமதி மாரிமுத்து
ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்தேனா?: கோமதி மாரிமுத்து பதில்!

ஊக்க மருந்துச் சோதனையில் தான் தோல்வியடைந்ததாக வெளியான செய்தியை மறுத்துள்ளார் கோமதி மாரிமுத்து.

டோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் திருச்சி அருகேயுள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி, தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ராசாத்தி தம்பதியின் மகள் கோமதி. மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணி, அடிப்படை வசதிகளில்லாத கிராமம், பள்ளிப் படிப்புக்கு கூட 15 கி.மீ. தொலைவு நடந்தே செல்லும் நிலை இருந்தது அவருக்குள் தடகளப் போட்டிக்கான உத்வேகத்தை அளித்தது. கடுமையான பயிற்சிகள் மூலம் தடகள வீராங்கனை ஆனார்.

ஆசிய தடகளப் போட்டியில், 30 வயதான கோமதி மாரிமுத்து 800 மீ. தூரத்தை 2:02.70 என்கிற நேரத்தில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். சீனா வீராங்கனையை முந்திக்கொண்டு கோமதி தங்கம் வென்றது வியப்பை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் பெரும்பாலான நேரங்களில் 3-ம் இடத்தில் இருந்த கோமதி கடைசி 100 மீ. ஓட்டத்தில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்றார். 

இந்நிலையில், ஊக்க மருந்துப் பரிசோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வியடைந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ளது. போலந்தில் இந்தியத் தடகள வீராங்கனைகளுடன் இணைந்து கோமதியும் பயிற்சி பெறுவதாக இருந்தது. அந்தத் திட்டத்தில் தற்போது மாற்றம் ஏற்படும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனினும் இந்தியத் தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில்லே சுமாரிவல்லா, இதுகுறித்துத் தனக்கு அதிகாரபூர்வத் தகவல் எதுவும் வெளிவரவில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆங்கில ஊடகங்களுக்கு கோமதி மாரிமுத்து கூறியதாவது: 

இந்தக் குற்றச்சாட்டை நான் செய்தித்தாளில் தான் பார்த்தேன். அதற்கு முன்னால் இதுபற்றி நான் எதுவும் கேள்விப்படவில்லை. இந்த விவகாரம் குறித்துத் தெளிவுபடுத்தவேண்டும் என்று தடகள சம்மேளனத்திடம் கூறியுள்ளேன். 

இந்தத் தகவலை அவர்கள் எங்குப் பெற்றார்கள்? அதுபற்றி ஏன் என்னிடம் கருத்து கேட்கவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளார் கோமதி. 

மேலும் இந்த விவகாரத்தால் கோமதி, போலந்து செல்வதற்குச் சிக்கல் எழுந்துள்ளதாக வெளியான செய்திக்கும் கோமதி தரப்பில் மறுப்பு கூறப்பட்டுள்ளது. அவர் மேலும் கூறியுள்ளதாவது: 

என் வாழ்க்கையில் தடை செய்யப்பட்ட மருந்துகளை நான் பயன்படுத்தியதேயில்லை. ஆசிய தடகளப் போட்டியின்போது நான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் பயன்படுத்தினேன். எனவே ஊக்க மருந்து சோதனையில் நான் தோல்வியடைந்ததாக வெளியான செய்தி தவறு. மேலும் பயிற்சிக்காக  நான் போலந்துக்குச் செல்வதிலும் சிக்கல் எதுவும் இல்லை. நாங்கள் வியாழன் அன்று போலந்துக்குப் புறப்படுகிறோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com