வேதனையில் தமிழகம்: ‘பி’ மாதிரி சோதனை முடிவுகள் கோமதி மாரிமுத்துவுக்குச் சாதகமாக அமையுமா?

இந்தப் பரிசோதனைகள் ஒரே ஆய்வுக்கூடத்தில் நடத்தப்படுவதால் முடிவுகளில் மாற்றம்...
வேதனையில் தமிழகம்: ‘பி’ மாதிரி சோதனை முடிவுகள் கோமதி மாரிமுத்துவுக்குச் சாதகமாக அமையுமா?

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து (30) ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பி மாதிரி சோதனைகளின் முடிவுகளை எதிர்நோக்கியுள்ளார் கோமதி. அதன் முடிவுகள் சாதகமாக அமையாவிட்டால் அவர் நான்கு ஆண்டுகள் தடையை எதிர்கொள்ள நேரிடும்.

தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் திருச்சி அருகேயுள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி, தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ராசாத்தி தம்பதியின் மகள் கோமதி. மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணி, அடிப்படை வசதிகளில்லாத கிராமம், பள்ளிப் படிப்புக்கு கூட 15 கி.மீ. தொலைவு நடந்தே செல்லும் நிலை இருந்தது அவருக்குள் தடகளப் போட்டிக்கான உத்வேகத்தை அளித்தது. கடுமையான பயிற்சிகள் மூலம் தடகள வீராங்கனை ஆனார்.

ஆசிய தடகளப் போட்டியில், 30 வயதான கோமதி மாரிமுத்து 800 மீ. தூரத்தை 2:02.70 என்கிற நேரத்தில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். சீனா வீராங்கனையை முந்திக்கொண்டு கோமதி தங்கம் வென்றது வியப்பை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் பெரும்பாலான நேரங்களில் 3-ம் இடத்தில் இருந்த கோமதி கடைசி 100 மீ. ஓட்டத்தில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்றார். இதனால் செப்டம்பரில் தோஹாவில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் அவர் தகுதியடைந்துள்ளார்.

800 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றதால் கோமதியை 4x400 மீ. தொடர் ஓட்டத்திலும் பங்கேற்கச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது இந்தியத் தடகளச் சம்மேளனம். இன்று சக வீராங்கனைகளுடன் போலந்துக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட இருந்தார் கோமதி. ஆனால் நேற்று வெளியான ஊக்க மருத்து சோதனை முடிவுகள் அனைத்துத் திட்டங்களையும் மாற்றிவிட்டது.

பெடரேஷன் கோப்பை மற்றும் ஆசிய தடகளப் போட்டி என இரண்டு போட்டிகளிலும் நடத்தப்பட்ட ஊக்க மருந்துப் பரிசோதனைகளில் கோமதி மாரிமுத்து தோல்வியடைந்துள்ளார். நான்ட்ரோலோன் என்கிற ஸ்டீராய்ட் மருந்தை அவர் உட்கொண்டிருப்பது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருடைய போலந்துப் பயணம் ரத்தாகியுள்ளது.

ஏ மாதிரி பிரிவு சோதனையில் தான் கோமதி தோல்வியடைந்துள்ளார். பி மாதிரி பிரிவு சோதனையிலும் அவர் தோல்வியுற்றால் 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆங்கில ஊடகங்களுக்கு கோமதி மாரிமுத்து கூறியதாவது: இந்தக் குற்றச்சாட்டை நான் செய்தித்தாளில் தான் பார்த்தேன். அதற்கு முன்னால் இதுபற்றி நான் எதுவும் கேள்விப்படவில்லை. என் வாழ்க்கையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை நான் பயன்படுத்தியதேயில்லை. ஆசிய தடகளப் போட்டியின்போது நான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் பயன்படுத்தினேன் என்று கூறினார். 

இந்தியத் தடகள சம்மேளனத்தின் தலைவர் அடிலி சுமரிவாலா இந்த விவகாரம் குறித்து அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இரு பரிசோதனைகளிலும் தோல்வியடைந்துள்ளதால் அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பி மாதிரி சோதனையின் முடிவுகளைக் கேட்க அவருக்கு உரிமை உள்ளது. அந்தச் சோதனையில் அவர் வெற்றி பெற்றுவிட்டால் இடைக்காலத் தடை நீக்கப்படும். இல்லாவிட்டால் அவர் நான்காண்டு தடையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறியுள்ளார். இதனால் கோமதியும் அவருடைய ரசிகர்களும் அடுத்தக்கட்ட முடிவை மிகவும் ஆவலாக எதிர்நோக்கியுள்ளார்கள். பி மாதிரி சோதனையின் விரைவில் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது. இதில் தனக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என கோமதி நம்புகிறார்.

ஆனால், பி மாதிரி சோதனைகளின் முடிவுகளில் பெரிய மாற்றம் இருக்காது என்கிறார்கள் விளையாட்டு நிபுணர்கள்.

ஊக்க மருத்து சோதனைக்காக எடுக்கப்படும் ஏ மாதிரி, பி மாதிரி ஆகிய இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்று கூறப்படுகிறது. ஊக்க மருந்துச் சோதனைக்கான சிறுநீர் மாதிரிகள், அதற்குரிய முகவையில் (ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் கொள்கலன்) சேமிக்கப்படும். அவை இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒன்று ஏ பிரிவு பாட்டில்களிலும் மற்றொன்று பி பிரிவு பாட்டில்களிலும் சேர்க்கப்பட்டு பிறகு பரிசோதிக்கப்படும். இந்தப் பரிசோதனைகள் ஒரே ஆய்வுக்கூடத்தில் நடத்தப்படுவதால் முடிவுகளில் மாற்றம் வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் 2009 முதல் இதே காரணத்துக்காக 100 இந்தியத் தடகள வீரர்களுக்குத் தேசிய  ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு (The National Anti-Doping Disciplinary Panel, ADDP) தண்டனை அளித்துள்ளது. அந்தப் பட்டியலில் தற்போது கோமதியும் இணையவுள்ளார்.

ஊக்க மருந்துப் பரிசோதனைகள், போட்டிகளின் போதும், போட்டிகளில் கலந்துகொள்ளாத போதும் நடத்தப்படுகின்றன. கோமதிக்கு அவர் இரண்டு போட்டிகளில் கலந்துகொண்டபோது பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பெடரேஷன் கோப்பை முடிவுகள் மார்ச் மாதம் எடுக்கப்பட்டுள்ளன. அவர் தேசியப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளாததால் அப்போட்டியின்போது ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் (நடா), அப்பரிசோதனையின் முடிவை உடனடியாக வெளியிடவில்லை. இதுதான் இப்பிரச்னைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துவிட்டது. அதேசமயம் அந்தத் தாமதத்தால் தான் கோமதியால் ஆசியத் தடகளப் போட்டியில் கலந்துகொள்ள முடிந்துள்ளது. ஆனால் இது மேலும் கோமதிக்குச் சிக்கலையே வரவழைத்துள்ளது.

இப்போது தோஹாவில் எடுக்கப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையிலும் கோமதி தோல்வியடைந்துள்ளார். மார்ச் மாதம் எடுக்கப்பட்ட சோதனையின் முடிவுகள் முதலிலேயே வெளியிடப்பட்டிருந்தால் கோமதியால் தோஹா போட்டியில் கலந்துகொண்டிருக்க முடியாது. ஆனால், அப்போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்று, புகழையும் உதவித்தொகைகளையும் பெற்றுள்ள கோமதி, தற்போதைய பரிசோதனை முடிவுகளால் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாகியுள்ளார். பி மாதிரி சோதனையின் முடிவுகள் அவருக்கு எந்தளவுக்குச் சாதகமாக அமையும் என்பது வரும்  நாள்களில்தான் தெரியவரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com