ஷகிப் அல் ஹசன் இந்தியச் சுற்றுப்பயணத்தில் இடம் பெறாமல் போகலாம்: வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் தகவல்

இன்று ஷகிப்பிடம் பேசினேன். பார்க்கலாம், அவர் என்ன சொல்கிறார் என்று. மற்றவர்களும் இருக்கலாம். எனக்குத் தெரியாது.
ஷகிப் அல் ஹசன் இந்தியச் சுற்றுப்பயணத்தில் இடம் பெறாமல் போகலாம்: வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் தகவல்
Updated on
1 min read

அடுத்த மாதம், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 3 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 14 அன்று தொடங்கி நவம்பர் 26 அன்று நிறைவுபெறுகிறது. 

ஊதிய உயர்வு உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.  நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இந்திய சுற்றுப் பயணத்தில் பங்கேற்க மாட்டோம் எனவும் எச்சரித்தனர். இதனால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் சிக்கலுக்கு தள்ளப்பட்டது. கடந்த வாரம் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வீரர்களின் கோரிக்கைகள் தீர்க்கப்படும் என உறுதி கூறப்பட்டது. இதனால் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக வீரர்கள் தெரிவித்தனர். எனினும் தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டார். வங்கதேச வீரர்கள், தொலைதொடர்பு நிறுவனங்களின் தூதராக இருக்கக்கூடாது என்கிற விதிமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது. இதை மீறியதால் விளக்கம் கேட்டு ஷகிப் அல் ஹசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியத் தொடருக்கான பயிற்சி முகாமில் ஷகிப் அல் ஹசன் பங்கேற்கவில்லை. கடைசி நாளன்று அவர் பங்கேற்றால் மட்டுமே நிலைமை சரியாகிவிட்டதாக எண்ண முடியும்.

இந்நிலையில் இந்தியச் சுற்றுப்பயணத்தில் ஷகிப் அல் ஹசன் இடம்பெறாமல் போகலாம் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசன் கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: வீரர்கள் சிலர் இந்தியாவுக்குச் செல்ல மாட்டார்கள். இன்று ஷகிப்பிடம் பேசினேன். பார்க்கலாம், அவர் என்ன சொல்கிறார் என்று. மற்றவர்களும் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் இந்தியாவுக்குச் செல்லமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். கடந்த சில நாள்களில் நிறைய மாறிவிட்டன. அக்டோபர் 30 அன்று வந்து, நாங்கள் இந்தியாவுக்குச் செல்லமாட்டோம் என்றால் நாங்கள் என்ன செய்வோம்? மொத்த அணியையும் மாற்றவேண்டும். கேப்டன் எங்கிருந்து கிடைப்பார்? அவர்களை வைத்து நான் என்ன செய்யட்டும் என்று சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். 

இந்தியச் சுற்றுப்பயணத்துக்காக அக்டோபர் 30 அன்று வங்கதேச வீரர்கள் இந்தியாவுக்குப் புறப்படுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com