

சர்வதேச ஆட்டங்களில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை இருப்பது போல முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்த வசதி ஏற்படுத்தித் தரப்படும். இதன் மூலம் அவர்களுடைய வருமானம் அதிகரிக்கும் என பிசிசிஐயின் புதிய தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம். புதிய நிதி நிர்வாகத்திடம் இதுகுறித்த வேலைகளைத் தொடங்கச் செய்வேன். இதுகுறித்து அலசி இறுதி முடிவெடுக்க இரு வாரங்கள் தேவைப்படும் என்று கங்குலி கூறியுள்ளார்.
தன்னுடைய வருமானத்தில் இருந்து 26% பணத்தை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கி வருகிறது பிசிசிஐ. அதில் பாதிப் பணம் சர்வதேச கிரிக்கெட்டில் ஈடுபடும் இந்திய வீரர்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு முதல் தர கிரிக்கெட் வீரருக்கும் விளையாடும் ஆட்டங்களுக்கு ஏற்ப வருமானம் பகிர்ந்தளிக்கப்படும். இதன்படி இந்திய முதல் தர கிரிக்கெட் வீரர்கள் வருடத்துக்கு ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை, பங்குபெறும் ஆட்டங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சம்பாதிக்கிறார்கள். இந்த வருமானத்தை உயர்த்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் கங்குலி. முதல்தர கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய வீரர்கள் நாளொன்றுக்கு ரூ. 35,000 பெறுகிறார்கள். இதை 50,000 ஆக உயர்த்த கங்குலி திட்டமிட்டுள்ளார். மேலும் வீரர்களின் ஆண்டு வருமானம் உயரவும் அவர் நிர்வாகிகளிடம் பேசி வருகிறார்.
முதல் தர கிரிக்கெட்டில் ஈடுபடும் வீரர்களின் வாழ்க்கைத் தரம் இதன் மூலம் உயரும். இதனால் கிரிக்கெட்டில் அவர்கள் அதிகக் கவனம் செலுத்துவார்கள். இது இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும் என்று கங்குலியின் புதிய திட்டம் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.