திறமைக்கு மரியாதை: அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான ஒப்பந்தத்தைப் பெற்ற ஜோஃப்ரா ஆர்ச்சர்!

உலகக் கோப்பை, ஆஷஸ் என்று கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான ஒப்பந்தத்தை அளித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
திறமைக்கு மரியாதை: அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான ஒப்பந்தத்தைப் பெற்ற ஜோஃப்ரா ஆர்ச்சர்!

உலகக் கோப்பை, ஆஷஸ் என்று கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான ஒப்பந்தத்தை அளித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஜோஃப்ரா ஆர்ச்சர், குறுகிய காலத்திலேயே புகழை அடைந்துள்ளார். இந்நிலையில் 2019-20 வருடத்துக்கான ஒப்பந்தத்தை ஆர்ச்சருக்கு வழங்கியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்றுக்குமான ஒப்பந்தத்தைப் பெற்ற ஆறு இங்கிலாந்து வீரர்களில் ஆர்ச்சரும் ஒருவர். ஒட்டுமொத்தமாக 10 வீரர்களுக்கு டெஸ்ட் ஒப்பந்தமும் 12 வீரர்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஒப்பந்தமும் அளிக்கப்பட்டுள்ளன. 

மேற்கிந்தியத் தீவுகளின் ஒன்றான பார்படாஸில் பிறந்த ஜோஃப்ரா ஆர்ச்சரின் தாய் மேற்கிந்தியத் தீவுகள் பகுதியைச் சேர்ந்தவர். தந்தையின் தாய்நாடு இங்கிலாந்து. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுவதற்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் விளையாடவே விருப்பம் கொண்டார் ஆர்ச்சர். அவருக்கு முன்பு மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கிறிஸ் ஜார்டன், பிறகு இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். அவர்தான் ஆர்ச்சருக்குப் பெரிய ஊக்கமாக இருந்தார். 2013-ல் பத்தொன்பது வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பிடித்தார் ஆர்ச்சர். பிறகு காயமடைந்ததால் அவரால் பார்படாஸ் அணியில் தொடர்ந்து நீடிக்கமுடியவில்லை. தனக்கான ஊக்கம் கிடைக்காமல் இருந்த நிலையில் அவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தார் கிறிஸ் ஜார்டன்.

பார்படாஸ் அணியின் வலைப்பயிற்சியில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சைக் கண்ட ஜார்டன், இங்கிலாந்து கவுண்டி அணியான சஸ்ஸக்ஸ் நிர்வாகத்தினரிடம் ஆர்ச்சரைப் பற்றிக் கூறினார். இதையடுத்து சஸ்ஸக்ஸ் அணியில் ஆர்ச்சர் இடம்பிடித்தார். 2016-ல் அந்த அணிக்காக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடினார். வேகப்பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாகவும் விளையாடியதால் அதிகக் கவனம் பெற்றார். அவரை டி20 கிளப்புகள் மொய்க்க ஆரம்பித்தன. ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ், பங்களாதேஷ் பிரிமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என முக்கியமான டி20 போட்டிகளில் விளையாடியவர், கடந்த வருடம் ஐபிஎல் போட்டியிலும் அறிமுகமானார். கடந்தவருட ஐபிஎல் ஏலத்தில், ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ. 7.20 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. அதுவரை எந்தவொரு சர்வதேச ஆட்டத்திலும் விளையாடாமல் டி20 லீக் போட்டிகளிலும் கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியே புகழ்பெற்ற ஆர்ச்சரை உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்தது இங்கிலாந்து அணி. கடைசியில் அந்த அணி உலகக் கோப்பையை வெற்றி பெற ஆர்ச்சரும் முக்கியக் காரணமாக அமைந்தார். தற்போது, இங்கிலாந்து அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளில் இடம்பிடித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-2 என சமன் செய்ததற்கு ஆர்ச்சர் முக்கியக் காரணம். இதன் அடிப்படையில் தற்போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராகி விட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com