உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் அமித் பங்கால், மணிஷ் கெளஷிக் ஆகியோருக்கு ரொக்கப் பரிசை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை வழங்கினார்.
ரஷியாவின் எகடெரின்பர்க்கில் அண்மையில் நடைபெற்ற ஆடவர் உலக குத்துச்சண்டை போட்டியில் 52 கிலோ பிரிவில் அமித் பங்கால் வெள்ளியும், 63 கிலோ பிரிவில் மணிஷ் வெண்கலமும் வென்றிருந்தனர்.
அமித் பங்கால் உலகப் போட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அவருக்கு ரூ.14 லட்சமும், மணிஷுக்கு ரூ.8 லட்சத்துக்கான காசோலையையும் மத்திய அமைச்சர் ரிஜிஜு வழங்கிப் பாராட்டினார்.
குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. வரும் 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிகபட்ச பதக்கங்களை வெல்லும். மத்திய அரசு இதற்கு துணை நிற்கும் என்றார் ரிஜிஜு.