ஆஸி. தொடரில் சேர்க்காததால் அதிர்ச்சி அடைந்தேன்: தினேஷ் கார்த்திக்
By DIN | Published On : 17th April 2019 01:32 AM | Last Updated : 17th April 2019 01:32 AM | அ+அ அ- |

இந்தியாவில் நடைபெற்ற ஆஸி.கிரிக்கெட் தொடரில் சேர்க்காததால் அதிர்ச்சி அடைந்தேன் என தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டாம் விக்கெட் கீப்பர் இடத்துக்கு ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இடையே கடும் போட்டி நிலவியது. இதற்கிடையே தோனிக்கு அடுத்து அனுபவம் நிறைந்த வீரராக தினேஷ் கார்த்திக் உள்ளார். மேலும் தொடக்க, மிடில், கடைசி கட்டத்திலும் பேட்ஸ்மேனாக ஆடும் திறமை உடையவர், பந்த்தை விட விக்கெட் கீப்பிங் அனுபவம் கொண்டவர் என்பதால் தினேஷ் சேர்க்கப்பட்டார் என தேர்வுக் குழு கூறியது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தினேஷ் கார்த்திக் கூறியதாவது:
உலகக் கோப்பை அணியில் கண்டிப்பாக இடம் பெறுவேன் என நம்பிக்கையுடன் இருந்தேன். கடந்த 2 ஆண்டுகளாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தேன். ஆஸி., மற்றும் நியூஸிலாந்து தொடர்களில் சிறப்பாக தான் ஆடியிருந்தேன். ஆனால் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் சேர்க்கப்படவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்தேன். தற்போது மகிழ்ச்சியாக உள்ளது.
எனினும் ஐபிஎல் ஆட்டங்களில் மேலும் கவனம் செலுத்த வேண்டும். அணிக்கு தேர்வு பெறுவது குறித்து நான் திங்கள்கிழமை காலை தான் சிந்திக்கத் தொடங்கினேன். கொல்கத்தா அணியின் கேப்டனாக மற்றவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு உள்ளது. சில நேரம் நமது கையில் எதுவும் இருக்காது.
அணியை அறிவிப்பதற்கு முன்பு தேர்வுக் குழு என்னிடம் பேசவில்லை. இதற்கு முன்னரே அவர்கள் முடிவை எடுத்திருந்தனர். ஆஸி. தொடருக்கு முன்பு எனக்கும், போட்டியில் இருக்கும் வீரர்களுக்கும் பல வாய்ப்புகள் தரப்படும் எனக் கூறினர். ஐபிஎல் ஆட்டத் தகுதியின்படி அணித் தேர்வு இல்லை. இந்திய அணிக்கான எனது பங்களிப்பு அடிப்படையில் தேர்வு நடந்தது என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...