ரஞ்சி கோப்பை சாம்பியன் விதர்பா மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை போட்டி நாக்பூரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இரானி கோப்பைக்கான போட்டி, வரும் மே, ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கான அணியை தேர்வு செய்ய ஒருவாய்ப்பாகவும் அமைந்துள்ளது. ரஞ்சி சாம்பியன் விதர்பா கடந்த 2017-18-இல் ரஞ்சி மற்றும் இரானி கோப்பைகளை வென்றிருந்தது. அதே போல் நிகழாண்டும் இரட்டை வெற்றி பெறும் மும்முரத்தில் உள்ளது.
அதே நேரத்தில் ரஹானே தலமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி வலுவான பேட்டிங் வரிசையுடன் காணப்படுகிறது. ரஹானே, மயங்க் அகர்வால், ஷிரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி உள்ளனர். இங்கிலாந்து லயன்ஸ்க்கு எதிராக இந்திய ஏ அணியில் ஆடிய ரஹானே 2 அரைசதங்களை விளாசினார்.
உலகக் கோப்பை அணியில் இடம் பெற மயங்கக் அகர்வால், ஐயர், விஹாரி போன்றோரும் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
பந்துவீச்சில் ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி வலுகுறைந்து உள்ளது.
ரஞ்சி சாம்பியன் விதர்பா அணியில் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் காயத்தால் ஆடவில்லை. நட்சத்திர வீரர்கள் வாஸிம் ஜாபர், ஆதித்ய சர்வேட், அக்ஷய் வத்கர், ஆகியோர் எதிரணிக்கு சவால் விட காத்துள்ளனர். இரு அணிகளும் நட்சத்திர வீரர்களுடன் உள்ளதால் போட்டி பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.