காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பாண்டியா, ராகுல் ஆகியோர் பெண்கள் தொடர்பாக கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. பல்வேறு தரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியாவில் இருந்த இருவரும் உடனே நாடு திரும்ப பிசிசிஐ உத்தரவிட்டது. இருவர் மீதான விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்வதாக கடந்த 11-ஆம் தேதி பிசிசிஐ அறிவித்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ சிஓஏ மனு செய்தது.
பிப்ரவரி 5-ஆம் தேதி தான் இதுதொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது. அணியின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதால், இதற்கிடையே விசாரணை நடைபெறும் வரை இருவர் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யலாம் என பிசிசிஐ தற்காலிக தலைவர் சிகே.கன்னா கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் இதுதொடர்பாக சட்ட ஆலோசகர் பிஎஸ்.நரசிம்மாவுடன் சிஓஏ ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் தீர்ப்பாயம் நியமிக்கப்படும் வரை இருவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை உடனே ரத்து செய்யப்படுகிறது என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஹார்திக் பாண்டியா, நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் உடனிடயாக இணைந்தார். அதே நேரத்தில் ராகுல், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணியில் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.