விம்பிள்டன் தொடரில் தனது ஆதர்ஸ நாயகியாக திகழும் வீனஸ் வில்லியம்ஸை 15 வயது வீராங்கனை முதல் போட்டியிலேயே வெற்றி கண்டார்.
டென்னிஸ் விளையாட்டின் புகழ்பெற்ற விம்பிள்டன் போட்டித் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மிகவும் பாரம்பரியமான இந்தத் தொடரில் கோப்பையை வெல்வது டென்னிஸ் நட்சத்திரங்களின் கவனாகும்.
இதில் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (39), சகநாட்டவரான கோரி காஃபை திங்கள்கிழமை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கோரி காஃப், விம்பிள்டன் முதல் போட்டியிலேயே தைரியமாக ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றார்.
வீனஸ் வில்லிம்ஸை தனது ஆதர்ஸ நாயகியாகக் கொண்ட 15 வயதான கோரி காஃப், விம்பிள்டன் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். இவர்கள் இருவருக்கும் இடையில் 24 வயதும், 269 தரவரிசைப் பட்டியலும் வித்தியாசம் உள்ளது கவனிக்கத்தக்கது.
விம்பிள்டனில் கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி வரும் வீனஸ் வில்லியம்ஸ், 5 முறை மகளிர் ஒற்றையர் கோப்பையைக் கைப்பற்றியுள்ளார். அதிலும் கோரி காஃப் பிறப்பதற்கு முன்பே வீனஸ், 2 விம்பிள்டன் கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டி முடந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கோரி காஃப், வீனஸ் எனக்கு மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்தார். அவர் எனக்கு செய்துள்ள அனைத்து உதவிகளுக்கும் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அவர் இன்றி நான் இந்த இடத்துக்கு முன்னேறியிருக்க முடியாது. இதை நான் இப்போது பெருமிதத்துடன் கூற விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.