லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 4 நாள் டெஸ்ட் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த டெஸ்டை வெற்றி பெற அயர்லாந்து அணிக்கு 182 ரன்கள் இலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அடுத்தடுத்த விக்கெட்டுகளின் சரிவால் முதல் இன்னிங்ஸில் 23.4 ஓவர்களில் 85 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ டென்லி 4 பவுண்டரிகள் உள்பட 23 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் டிம் முர்டாக் 13 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய அயர்லாந்து, 58.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆன்டி பால்பிர்னி 10 பவுண்டரிகள் உள்பட 55 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட், ஆலி ஸ்டோன், சாம் கரன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸில் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து கவனமாக விளையாடியது. 2-ம் நாளின் முடிவில் 77.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. லீச் 92, ராய் 72 ரன்கள் எடுத்தார்கள். இதனால் இங்கிலாந்து அணி 1 விக்கெட் மீதமுள்ள நிலையில் 181 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் மழை காரணமாகத் தாமதமாக தொடங்கிய இன்றைய ஆட்டத்தின் முதல் பந்திலேயே கடைசி விக்கெட்டை வீழ்த்தியது அயர்லாந்து அணி. இதனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்த டெஸ்டை வென்று சாதனை புரிய அயர்லாந்து அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.