கடந்த இரு வருடங்களாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றார் அஸ்வின். அவர் கேப்டனாக இருந்த 28 ஆட்டங்களில் பஞ்சாப் அணி 12-ல் வெற்றியும் 16-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. கடந்த வருடம் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடமும் இந்த வருடம் 6-ம் இடமும் பிடித்தது. இரண்டு வருடங்களிலும் கடைசிக்கட்டத்தில் மோசமாக விளையாடியதால் பிளேஆஃப்-புக்கு அந்த அணியால் தகுதி பெற முடியாமல் போனது. இந்நிலையில் பஞ்சாப் அணியிலிருந்து தில்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறியுள்ளார் அஸ்வின். 2018 ஐபிஎல் ஏலத்தில் அஸ்வினை ரூ. 7.60 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. தற்போது, அதே தொகைக்கு அஸ்வின், தில்லி அணிக்குத் தேர்வாகியுள்ளார். 139 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள அஸ்வின், 125 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி - 6.79.
தில்லி கேபிடல்ஸ் அணியில் அஸ்வின் இணைந்தது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
அஸ்வின் எந்த அணியிலும் இருந்தாலும் அந்த அணிக்குப் பலம் சேர்க்கிறார். அதேபோல, தில்லி கேபிடல்ஸ் அணிக்கும் அவர் கூடுதல் பலத்தை அளிப்பார். தில்லி மைதானம், சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமானது. அஸ்வின் புத்திசாலித்தனமாகப் பந்துவீசி, நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறியுள்ளார்.