வங்கதேசம் எடுத்தது மிகவும் தைரியமான முடிவு: அஸ்வின்
By DIN | Published On : 14th November 2019 09:58 PM | Last Updated : 14th November 2019 09:58 PM | அ+அ அ- |

இன்றைய ஆட்டத்தின்போது விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் அஸ்வின் (கோப்புப்படம்)
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது தைரியமான முடிவு என இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணித் தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், இஷாந்த் மற்றும் உமேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 86 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 37 ரன்களுடனும், சேத்தேஷ்வர் புஜாரா 43 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள்: முதல் நாளிலிருந்தே ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!
இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"டாஸ் வென்று முதலில் பேட் செய்வதாக எடுக்கப்பட்ட முடிவு மிகவும் தைரியமான முடிவாக நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் பந்துவீசுவார்கள் என்றுதான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் முதலில் பேட் செய்தார்கள். அது பாராட்டுக்குரியது. இன்று காலை சில பேட்ஸ்மேன்கள் அற்புதமாக பேட் செய்தனர். பந்துவீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக உள்ள ஆடுகளத்தில் களமிறங்கி விளையாடுவது என்பது எளிதானது அல்ல" என்றார்.
இதையடுத்து, பகலிரவு டெஸ்ட் ஆட்டம் குறித்து பேசிய அஸ்வின்,
"டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடாக, பகலிரவு டெஸ்ட் ஆட்டம் விளையாடுவது எங்களு மிகவும் முக்கியமானது. வேலைக்குப் போகும் மக்களும் ஆட்டத்தைக் காண வருவார்கள். பிங்க் நிற பந்தில் விளையாடுவது மிகவும் சவாலானது. இது வரலாற்றுச் சிறப்பு தருணம். நிறைய பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள் விளையாடுவதற்கான தொடக்கம்தான் இது" என்றார்.
அதேசமயம், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணியை தலைசிறந்தது எனவும் அஸ்வின் பாராட்டினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...