இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய ஒருநாள், டி20 அணிகளில் அஸ்வினைச் சேர்க்கவேண்டும் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டியளித்ததாவது: ஆரம்பத்தில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் தேவை என்றால் விக்கெட்டுகள் அதிகம் எடுக்கும் அஸ்வினை நீங்கள் தேர்வு செய்யவேண்டும். அவருக்கு ஏன் வாய்ப்பளிக்கக் கூடாது? டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாகப் பந்துவீசி வருகிறார்.
அவர் பந்துகளை நன்குச் சுழலச் செய்வார். பலவகையான பந்துவீச்சு முறைகளைக் கையாள்வார். வாஷிங்டன் சுந்தர் இதைக் கற்றுக்கொள்ளவேண்டும். அவர் நன்றாக விளையாடவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். இளம் வீரர்களை அணிக்குள் சேர்ப்பதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், அவர்கள் பல உத்திகளைக் கற்றுக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கடுமையான போட்டிக்கு மத்தியில் அவர்கள் நீக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.