தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து ஜனவரி வரை கேட்க வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்துக்குப் பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கவில்லை. அண்மையில் அறிவிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணியில் கூட தோனி இடம்பெறவில்லை. இதனால், அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகிறது.
இதனிடையே, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளிக்கையில், "ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனியின் செயல்பாட்டைப் பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தோனி இன்று (புதன்கிழமை) பங்கேற்றார். அப்போது அவருடைய எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்புவதற்கு முன்பே, "ஜனவரி வரை என்னிடம் கேட்க வேண்டாம்" என்று தெரிவித்தார்.
தோனியின் எதிர்காலம் குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கையில், "அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பின் தோனி, தனது எதிர்காலம் குறித்து முடிவெடுப்பார்" என்றார்.