ஐபிஎல் 2020 செயல்பாட்டை பொறுத்தே தோனியின் எதிர்காலம்

ஐபிஎல் 2020 போட்டியில் தோனியின் செயல்பாட்டைப் பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும்  என தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
ஐபிஎல் 2020 செயல்பாட்டை பொறுத்தே தோனியின் எதிர்காலம்

புது தில்லி: ஐபிஎல் 2020 போட்டியில் தோனியின் செயல்பாட்டைப் பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும்  என தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

டெஸ்ட் ஆட்டத்தில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், உலகக் கோப்பை 2019 ஆட்டத்துக்கு பின் அவர் ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற வேண்டும் என பலர் கருத்து தெரிவித்தனர். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் அவர் ஓய்வு பெற வேண்டும் என கூறினர்.

ஆனால் தோனி எந்த கருத்தையும் கூறவில்லை. எனினும் அவரது மனைவி சாக்ஷி அவர் ஓய்வு பெற வில்லை எனக்கூறி முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.

ரவிசாஸ்திரி இதுதொடர்பாக கூறியதாவது:  உலகக் கோப்பை போட்டியில் தோல்வியடைந்தது மிகவும் வேதனையான நிகழ்வு. நமது வீரர்கள் கடந்த ஜூலை 9-ஆம் தேதி எத்தகைய மனநிலையில் இருந்தனர் என்பதை அறிவேன். அதில் இருந்து மீண்டு தற்போது வலிமை வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளோம். அடுத்து 2020-இல் நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக வேண்டும். 

ஒவ்வொருவர் மனதிலும் உள்ள கேள்வி தோனியின் எதிர்காலம் குறித்து தான். அவர் அணியில் இடம் பெறுவாரா என்பது 2020 ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாட்டை பொறுத்தே அமையும். விக்கெட் கீப்பிங்கில் யார் இடம் பெறுவார்கள் என்பதை அறியலாம். டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஐபிஎல் போட்டியே பெரிய போட்டியாகும்.  அதுவரை காத்திருக்க வேண்டும். அதில் தான் நாட்டுக்காக ஆடவுள்ள 17 சிறந்த வீரர்களை அறிவிக்க முடியும்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் நேரான பாதையில் செல்லும். அவர் சிறந்த வீரர், கேப்டனாக திகழ்ந்தார். இளம் வீரர் ரிஷப்பந்த்துக்கு மேலும் வாய்ப்பு தர வேண்டும். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் தான். பிங்க் பந்து டெஸ்ட் சிறப்பாக அமைந்தது. இதற்கு கங்குலி, சிஏபி முக்கிய காரணம். பார்வையாளர்களும் சிறப்பான ஆதரவு தந்தனர். பிங்க் நிற பந்து செயல்பாடு தொடர்பாக மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றார். 
தீவிர பயிற்சியில் தோனி: வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரிலும் ஆடவில்லை தோனி. இந்நிலையில் கடந்த சில நாள்களாக ராஞ்சியில் ஜார்க்கண்ட் மாநில 23 வயதுக்குட்பட்டோர் அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் மீண்டும் தீவிர கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகிறார் எனக் கூறப்படுகிறது.
தோனியின் அந்தஸ்துக்குரிய மரியாதையை பிசிசிஐ எப்போதும் தரும் என அதன் தலைவர் கங்குலி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
2007 டி20, 2011 ஒருநாள் உலகக்கோப்பைகளை இந்தியாவுக்கு பெற்றுத் தந்த தோனி, 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 சர்வதேச ஆட்டங்களில் ஆடியுள்ளார். மொத்தம் 17 ஆயிரம் ரன்களையும் குவித்துள்ளார். உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான தோனி குறுகிய ஓவர் ஆட்டங்களில் 500 பேரையும், டெஸ்ட் ஆட்டங்களில் 300 பேரையும் அவுட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com