இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீரின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் வாழ்க்கையை தானே முடிவுக்கு கொண்டு வந்ததாக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்ஃபான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்ஃபான் சமா தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் பேசிய அவர்,
"நான் இந்தியாவுக்கு எதிராக விளையாடியபோது, எனக்கு எதிராக பேட்டிங் செய்வது அவர்களுக்கு எளிதாக இல்லை. 2012-இல் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில், எனது உயரம் காரணமாக இந்திய பேட்ஸ்மேன்களால் எனது பந்தை கவனிக்க முடியவில்லை என்று ஒரு சிலர் என்னிடம் தெரிவித்தனர். எனது வேகத்தையும் அவர்களால் கணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட அந்த தொடர்தான் கௌதம் கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது. ஆட்டத்தில் என்னை எதிர்கொள்வதை அவர் விரும்பவில்லை. இரு அணிகளின் வலைப்பயிற்சியின்போதும் அவர் என்னை எதிர்கொள்வதைத் தவிர்த்ததாகவே நான் உணர்ந்தேன்.
2012-இல் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் நான் அவரை 4 முறை ஆட்டமிழக்கச் செய்தேன். அவர் என்னை எதிர்கொள்வதில் பதற்றம் அடைந்தார்" என்றார்.
இதன்பிறகு விராட் கோலி குறித்து பேசிய இர்ஃபான்,
"நான் மணிக்கு 130-135 கி.மீ வேகத்தில் பந்துவீசுவேன் என்று நினைத்ததாக விராட் கோலி என்னிடம் தெரிவித்தார். ஆனால், நான் எனது வேகத்தை அதிகரித்து சுமார் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் பந்துவீசினேன். அதனால், அவரால் எனது பந்தை எதிர்கொள்ள முடியவில்லை.
ஒருமுறை எனது பந்தை விராட் கோலி புல் ஷாட் ஆட முயற்சித்தார். ஆனால், அவர் எனது பந்தை தவறவிட்டார். மறுமுனையில் இருந்த யுவராஜ் சிங், இவரது பந்தை புல் ஷாட் ஆட முயற்சிக்க வேண்டாம், கட் ஷாட் ஆட முயற்சிக்கவும் என பஞ்சாபி மொழியில் அறிவுறுத்தினார்.
ஆனால், எனது மூன்றாவது பந்தில் விராட் கோலி புல் ஷாட் ஆடி ஆட்டமிழந்தார்" என்றார்.
2012-இல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியதுதான் இந்திய அணிக்காக கௌதம் கம்பீர் விளையாடிய கடைசி சர்வதேச டி20 தொடர். ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்குப் பின் இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு, அவர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை.