தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இரண்டு சதங்கள் அடித்ததன் மூலம், ரோஹித் சர்மா பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று வெளியான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ரோஹித் சர்மா டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 36 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் 25-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 2-வது இடத்திலேயே நீடிக்கிறார். ஆனால், கடந்தாண்டு ஜனவரி முதல் 900-க்கும் மேற்பட்ட புள்ளிகளுடன் நீடித்து வந்த அவர், தற்போது 899 புள்ளிகளுடன் இருக்கிறார்.
பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் டாப்-10 இல் நுழைந்துள்ளார். தற்போது இவர் 10-வது இடத்தில் உள்ளார். அதேசமயம், ஆல்-ரௌண்டர்கள் தரவரிசையில் டாப்-5 இல் நுழைந்துள்ளார்.
வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி முதன்முறையாக 710 புள்ளிகள் பெற்று 16-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை, சதம் அடித்த குயின்டன் டி காக் மற்றும் டீன் எல்கர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். டி காக் 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு டாப்-10 இல் நுழைந்து 7-வது இடத்தில் உள்ளார். எல்கர் 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு 14-வது இடத்தில் உள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 40 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதன்மூலம், இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.