

இந்திய இளம் வீரர்களான ஜெயிஸ்வால், ரியான் பரக் ஆகிய இருவரும் 2020 ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்.
ஃபேஸ்புக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் இஷ் சோதியுடனான உரையாடலில் ஸ்மித் தெரிவித்ததாவது:
கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 17 வயது ரியான் பரக், சுதந்திரமாக விளையாடி தனது பேட்டிங்கினால் சில ஆட்டங்களை வெல்லவும் உதவினார். அந்த வெற்றிகளால் அவர் அடைந்த மகிழ்ச்சியை நான் கண்டேன். தோனிக்கு எதிராகப் பந்துவீசும்போது கிட்டத்தட்ட அவர் விக்கெட்டை எடுக்கும் நிலைக்குச் சென்றார். ரியான் போன்ற திறமையான இளம் வீரர்களைக் கொண்டிருப்பதில் நாங்கள் அதிர்ஷ்டம் அடைந்துள்ளோம்.
யு-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்துள்ளார் ஜெயிஸ்வால். திறமையான வீரர். இவரைப் போன்ற இளம் வீரர்கள் இந்த வருடம் நன்கு விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன் என ஸ்மித் கூறியுள்ளார்.
கடந்த வருடம், ஜார்கண்டுக்கு எதிராக இரட்டைச் சதமெடுத்து உலக சாதனை படைத்தார் ஜெய்ஸ்வால். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்து 9-வது இந்திய வீரர். அலூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 154 பந்துகளில் 203 ரன்கள் எடுத்தார் ஜெய்ஸ்வால். அதில் 12 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள். அதாவது 140 ரன்கள் சிக்ஸர், பவுண்டரிகளில் கிடைத்தன. மேலும் யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதனால் ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2.40 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.