பல நாள்களுக்குப் பிறகு குடும்பத்தினரைச் சந்தித்த டிஎஸ்பி ஜொகிந்தர் சர்மா

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், ஹரியாணா காவல்துறையில் டிஎஸ்பியாகப் பணியாற்றி வருகிறார்.
பல நாள்களுக்குப் பிறகு குடும்பத்தினரைச் சந்தித்த டிஎஸ்பி ஜொகிந்தர் சர்மா
Updated on
1 min read

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 10,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

2007 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிச்சுற்றில் கடைசி ஓவரில் பிரமாதமாகப் பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார் ஜொகிந்தர் சர்மா. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், ஹரியாணா காவல்துறையில் டிஎஸ்பியாகப் பணியாற்றி வருகிறார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஹிசார் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஜொகிந்தர் சர்மாவைப் பாராட்டி ஐசிசி நிறுவனம் சமீபத்தில் ட்வீட் வெளியிட்டது. 2007-ல் உலகக் கோப்பை ஹீரோ, 2020-ல் நிஜ உலகின் ஹீரோ என அவரைப் பாராட்டியது.

இந்நிலையில் பல நாள்களுக்குப் பிறகு குடும்பத்தினரைச் சந்தித்தது குறித்து ட்வீட் செய்துள்ளார் ஜொகிந்தர் சர்மா. ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நீண்ட நாள்களுக்குப் பிறகு குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்தேன். பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடன் வீட்டில் இருக்கும்படி குழந்தைகளுக்கு அறிவுறுத்தினேன் என்று கூறியுள்ளார்.

தன்னுடைய பணி குறித்து க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு சில நாள்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் ஜொகிந்தர் சர்மா கூறியதாவது:

2017-ல் கிரிக்கெட்டிலிருந்து விலகியது முதல் காவல்துறையில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறேன். காவல் அதிகாரியாக நான் சந்தித்த சவால்களில் தற்போதைய பணி தான் மிகவும் சவாலாக உள்ளது. ஹிசாரில் பணியாற்றி வருகிறேன். மக்களை மட்டுமல்லாமல் காவலர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைமையில் உள்ளோம்.

தினமும் காலையில் ஆறு மணி முதல் என்னுடைய பணி ஆரம்பமாகும். 24 மணி நேரமும் எவ்வித பணிகளுக்கும் நான் தயாராக இருக்கவேண்டும். பாதுகாப்பாக இருப்பது குறித்த அறிவுரைகளை மக்களுக்குத் தொடர்ந்து வழங்கவேண்டும். தேவையின்றி வெளியில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். என்னைக் காணும் மக்களில் பலர் என்னை அடையாளம் கண்டு கொண்டு செல்பி புகைப்படம் கேட்பார்கள். ஆனால் நிலைமை சரியான பிறகுதான் செல்பி புகைப்படம் எடுக்கமுடியும் என அவர்களுக்கு அறிவுறுத்துவேன்.

ஹிசாரிலிருந்து 110 கி.மீ தள்ளி உள்ள ரோஹ்டக்கில் நான் வசிக்கிறேன். சாலையில் பயணம் செய்தால் ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். எனினும் இச்சமயத்தில் தினமும் பல்வேறு மக்களைச் சந்திப்பதால் பாதுகாப்பு கருதி வீட்டுக்குச் செல்லக்கூடாது என முடிவெடுத்துள்ளேன். என்னால் என் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com