2010-ல் 19 வயதில் இந்திய அணிக்காக டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடினார் ஜெயதேவ் உனாட்கட். அதன்பிறகு 7 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய உனாட்கட் கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணியில் இடம்பெறவில்லை.
ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
சிவப்புப் பந்தில் விளையாடுவது மிகவும் ஆர்வமூட்டுகிறது. முதல் டெஸ்டுக்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை நினைக்காத நாளில்லை. அதனால் இந்திய டெஸ்ட் அணியில் நான் இடம்பெற வேண்டும். ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. ஆகவே போட்டியும் கடுமையாக உள்ளது. மேலும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் நான் நன்கு விளையாடவேண்டும் என்பதே விருப்பம். இந்திய அணியில் விரைவில் இடம்பிடித்து திறமையை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு நான் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ரஞ்சி கோப்பைப் போட்டியில் 67 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் 28 வயது உனாட்கட். அவர் தலைமை வகித்த செளராஷ்டிரம் அணி ரஞ்சி கோப்பையை வென்றது.