விளக்கொளியில் டெஸ்ட் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுவதற்காக இளஞ்சிவப்பு பந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் யோசனை தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் செளதாம்ப்டனில் தொடங்கியுள்ளது.
2-வது நாளின் முடிவில் பாகிஸ்தான் அணி 86 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தின் ஆண்டர்சன், பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.
2-வது டெஸ்ட் ஆட்டம் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மாலை வேளையில் மழை பெய்யாத போதிலும் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தைத் தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு ஒரு தீர்வை கூறியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான். அவர் கூறியதாவது:
வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபடுவது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. இதற்குத் தீர்வு - இளஞ்சிவப்புப் பந்தை எல்லா நேரமும் பயன்படுத்துவதுதான், முக்கியமாக இங்கிலாந்தில். கிரிக்கெட் ஒளிரப்புக்காக ஐசிசிக்குப் பெரிய தொகை அளிப்பவர்கள் இதுகுறித்து புகார் அளிக்கவேண்டும். இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கப்பட வேண்டும். வெளிச்சம் இல்லாதபோதும் ஆட்டம் தொடர வேண்டும் என்றார்.