2013-ல் மும்பையில் சச்சின் விளையாடிய கடைசி டெஸ்ட்டில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றவர் யார் தெரியுமா?
இடக்கை சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா.
அந்த டெஸ்டில் இருமுறை 5 விக்கெட்டுகள் என 10 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஓஜா, அதன்பிறகு இந்திய அணிக்காக எந்தவொரு சர்வதேச ஆட்டத்திலும் விளையாடவில்லை என்பதே சோகம்.
இந்திய அணிக்காக 24 டெஸ்டுகள், 18 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஓஜா, 33 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
24 டெஸ்டுகள் விளையாடினாலும் ஆசியாவுக்கு வெளியே ஓஜா ஒரு டெஸ்டிலும் விளையாடியதில்லை. கடைசி டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்றும் அதற்குப் பிறகு விளையாடாததற்குக் காரணம், ரவிந்திர ஜடேஜா.
2012-லேயே டெஸ்டில் அறிமுகமான ஜடேஜா, ஆல்ரவுண்டருக்கான திறமைகளைக் கொண்டிருந்ததால் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. கிடைத்த வாய்ப்பைகளை அவர் நன்குப் பயன்படுத்திக்கொண்டதால் ஓஜாவின் பங்களிப்பு இந்திய அணிக்குத் தேவைப்படாமல் போனது. தவிரவும் 2014-ல் ஓஜாவின் பந்துவீச்சு முறை காரணமாக ஐசிசியால் இடைக்காலத் தடையை எதிர்கொண்டார். 2015-ல் மீண்டும் பந்துவீச அனுமதி கிடைத்தது. அந்தச் சமயத்தில் ஓஜாவுக்கு இந்திய அணியின் கதவு பலமாக மூடியிருந்தது. இதனால் டெஸ்டில் விரைவாக 100 விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றாலும் ஓஜாவால் அதிக டெஸ்டுகளில் விளையாட முடியாமல் போனது.
ஐபிஎல்-லில் 2008 முதல் 2015 வரை 92 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.