பஞ்சாப் - தில்லி அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் மொஹலியில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் சன்வீர் சிங் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஷுப்மன் கில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததாக கள நடுவர் தீர்ப்பு வழங்கினார். ஆனால் பந்து பேட்டில் படவில்லையென ஷுப்மன் கில் மைதானத்தை விட்டு வெளியேற மறுத்தார். மேலும் நடுவர் முகமது ரஃபியிடம் வாக்குவாதமும் செய்துள்ளார். இதையடுத்து நடுவர் தன்னுடைய முடிவை மாற்றி ஷுப்மன் கில் அவுட் இல்லையென அறிவித்தார்.
இதில் கடுப்பான தில்லி வீரர்கள் உடனே மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பிறகு ஆட்ட நடுவர், தில்லி வீரர்களைச் சமாதானப்படுத்தினார்கள். பிறகு ஆட்டம் தொடர்ந்தது.
இதற்குப் பிறகு விளையாடிய ஷுப்மன் கில், 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தச் சம்பவங்களால் ஷுப்மன் கில் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.