இந்த நூற்றாண்டின் மதிப்புமிக்க இந்திய வீரர் - ஜடேஜா: காரணம் என்ன?

அவருடைய பந்துவீச்சு சராசரியான 24.62, வார்னேவை விடவும் சிறந்ததாக உள்ளது.
இந்த நூற்றாண்டின் மதிப்புமிக்க இந்திய வீரர் - ஜடேஜா: காரணம் என்ன?

இந்த நூற்றாண்டின் மதிப்புமிக்க இந்திய வீரராக ஜடேஜாவைத் தேர்வு செய்துள்ளது விஸ்டன் நிறுவனம். 

கிரிக்விஷ் என்கிற தகவல் ஆய்வுச் சாதனம் மூலமாகக் கணக்கிடப்பட்டதில் 97.3 ரேட்டிங் பெற்று இந்தப் பெருமையை அடைந்துள்ளார் ஜடேஜா. 

அதேபோல இதே தகவல் ஆய்வின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புள்ள வீரர்களின் பட்டியலில் முரளிதரனுக்கு அடுத்ததாக 2-ம் இடம் பிடித்துள்ளார் ஜடேஜா. 

பேட்டிங், பந்துவீச்சில் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் 31 வயது ஜடேஜா அற்புதமாகப் பங்களிப்பதால் இந்த நூற்றாண்டின் மதிப்புமிக்க இந்திய வீரராக ஜடேஜா தேர்வாகியுள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 213 விக்கெட்டுகளும் 1869 ரன்களும் எடுத்துள்ள ஜடேஜா, ஒருநாள் கிரிக்கெட்டில் 187 விக்கெட்டுகளும் 2296 ரன்களும் எடுத்துள்ளார்.

கிரிக்விஷ்-ன் ஃபிரெட்டி வைல்ட் ஜடேஜாவின் தேர்வு பற்றி கூறியதாவது:

இந்தியாவின் நெ.1 வீரராக ஜடேஜா தேர்வானது பலருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கலாம். இத்தனைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எப்போதும் தேர்வு செய்யப்படுவதில்லை. ஆனால் எப்போது தேர்வானாலும் முன்னணி பந்துவீச்சாளராகவும் பேட்டிங்கில் 6-ம் நிலை வீரராகவும் விளையாடுகிறார். இதனால் அவருடைய பங்களிப்பு அதிகமாக உள்ளது.

அவருடைய பந்துவீச்சு சராசரியான 24.62, வார்னேவை விடவும் சிறந்ததாக உள்ளது. பேட்டிங் சராசரியான 35.26, ஷேன் வாட்சனை விடவும் அதிகமாக உள்ளது. 1000 ரன்களும் 150 விக்கெட்டுகளும் எடுத்த வீரர்களில் ஜடேஜாவுக்கு பேட்டிங் - பந்துவீச்சு இடையிலான சராசரியில் 10.62 ரன்கள் வித்தியாசம் உள்ளது. இந்த நூற்றாண்டில் இதற்கு 2-வது இடம். மிகவும் தரமான ஆல்ரவுண்டர் அவர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com