தவறே செய்யாமல் 27 வருடங்கள் சிறையில் இருந்தார் நெல்சன் மண்டேலா: ஆர்ச்சர் விவகாரம் குறித்து ஹோல்டிங்!

அனைவரும் ஒன்றாகப் பேருந்தில் ஏன் செல்லக்கூடாது? காரில் செல்ல ஏன் அனுமதிக்கப்பட்டார்கள்...
தவறே செய்யாமல் 27 வருடங்கள் சிறையில் இருந்தார் நெல்சன் மண்டேலா: ஆர்ச்சர் விவகாரம் குறித்து ஹோல்டிங்!

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் 2-வது டெஸ்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர். இந்த விவகாரத்தில் ஆர்ச்சரின் நடவடிக்கைக்கு முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. 

2-வது டெஸ்ட் ஆட்டத்துக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி முதலில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஆர்ச்சர் இடம்பெற்றிருந்தார். ஆனால் பாதுகாப்பு விதிமுறைகளை அவர் மீறியதால் தற்போது 2-வது டெஸ்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

செளதாம்ப்டனிலிருந்து மான்செஸ்டருக்குச் செல்லும் வழியில் விதிமுறையை மீறி தனது வீட்டுக்குச் சென்றுள்ளார் ஆர்ச்சர். ஒவ்வொரு வீரரின் அடையாள அட்டையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த ஒரு வீரராவது பாதுகாப்பு விதிமுறையை மீறினால் கண்டுபிடித்துவிட முடியும். செளதாம்ப்டனிலிருந்து மான்செஸ்டருக்கு ஒவ்வொரு வீரரும் தனியாகச் சென்றுள்ளார்கள். பேருந்தில் சென்றால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால் அனைவரும் அவரவர் காரில் சென்றுள்ளார்கள். இதில், ஆர்ச்சர் மட்டும் செல்லும் வழியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றதால் தற்போது அவருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 2-வது டெஸ்டிலிருந்து நீக்கப்பட்ட ஆர்ச்சர், 5 நாள்கள் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. இந்த 5 நாள்களுக்குள் இருமுறை அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இரு பரிசோதனைகளின் முடிவுகளிலும் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று உறுதியான பிறகே அணியினருடன் இணைந்துகொள்ள அனுமதிக்கப்படுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஆர்ச்சரின் நடவடிக்கைக்கு முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

நல்ல விஷயத்துக்காகத் தியாகம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் ஆர்ச்சர் மீது எனக்கு அனுதாபம் ஏற்படவில்லை. என்ன தேவையோ அதைச் செய்வதில் இவர்களுக்கு என்ன பிரச்னை? எனக்குப் புரியவில்லை. தியாகம் பற்றி குறிப்பிடும்போது -  ஒரு தவறும் செய்யாமல் 27 வருடங்களைச் சிறையில் அனுபவித்தார் நெல்சன் மண்டேலா. அதுதான் தியாகம். ஒரே பேருந்தில் அனைத்து வீரர்களும் ஏன் செல்லக்கூடாது. கரோனா பரிசோதனையில் அனைவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆறு டெஸ்ட் ஆட்டங்கள் உள்ளன. ஒரு மைதானத்திலிருந்து இன்னொன்றுக்குச் செல்கிறார்கள். இந்நிலையில் அனைவரும் ஒன்றாகப் பேருந்தில் ஏன் செல்லக்கூடாது? காரில் செல்ல ஏன் அனுமதிக்கப்பட்டார்கள்? கொஞ்சம் யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com