அடுத்த வருடம் டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுவதால் 32 வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுக்குப் பணி நீட்டிப்பை வழங்கியுள்ளது சாய் அமைப்பு.
விளையாட்டு உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டி 2016-ல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. அதன்பின் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால், போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என விளையாட்டு வீரா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் வலியுறுத்தினா். இதையடுத்து இந்த வருடம் நடக்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த வருடத்துடன் ஒப்பந்தம் முடியவிருந்த 32 வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுக்குப் பணி நீட்டிப்பை வழங்கியுள்ளது இந்திய விளையாட்டு ஆணைய மையம் (சாய் அமைப்பு). இதுபற்றி விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
ஒலிம்பிக்ஸ் போட்டி ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டுப் பயிற்சியாளர்களின் ஒப்பந்தமும் ஒரு வருடத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீரர்களுக்கு எவ்வித சிரமங்களும் ஏற்படக்கூடாது என்றெண்ணி இதைச் செய்துள்ளோம். புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டால் இரு தரப்பும் ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ள சிறிது காலம் ஆகும். இப்போதைய நிலையில் அது தேவையில்லை என்றார்.