

ஸ்பெயினின் 21 வயதுக் கால்பந்துப் பயிற்சியாளர் கரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.
மலகாவில் உள்ள அட்லெடிகோ போர்டடா அல்டா என்கிற ஜுனியர் கால்பந்து கிளப்பின் பயிற்சியாளராகப் பணியாற்றியவர், 21 வயது ஃபிரான்சிஸ்கோ கார்சியா. அந்த கிளப் அணியின் வீரராகவும் அவர் உள்ளார்.
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஃபிரான்சிஸ்கோவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இதற்கான சிகிச்சையின்போதுதான் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. புற்றுநோயின் தீவிரத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
உலகளவில், கரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பலியானவா்களில் இளம் வயதைக் கொண்டவராக ஃபிரான்சிஸ்கோ கார்சியா உள்ளார். இத்தாலியில் கரோனாவால் 38 வயதிலும் சீனாவில் 36 வயதிலும் நோயாளிகள் இறந்ததுதான் குறைந்த வயதில் உயிரிழந்தவர்களாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில் 21 வயதில் கரோனாவுக்குப் பலியாகியுள்ளார் ஃபிரான்சிஸ்கோ கார்சியா.
ஃபிரான்சிஸ்கோவின் மறைவுக்கு அட்லெடிகோ போர்டடா அல்டா கால்பந்து கிளப் இரங்கல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.