

பலமுனைகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதால் இலங்கை கொழும்பில் பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டும் முடிவு கைவிடப்பட்டுள்ளது.
கொழும்பில் 40,000 ரசிகர்கள் அமரக்கூடிய விதத்தில் பெரிய மைதானம் ஒன்றைக் கட்ட முடிவு செய்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். இதற்கு இலங்கை அரசும் சம்மதம் தெரிவித்தது. இதற்காக 26 ஏக்கருக்கு இடத்தை வழங்கவும் முடிவு செய்தது.
ஆனால் முன்னாள் வீரர் மஹேலா ஜெயவர்தனே, முன்னாள் நடுவர் ரோஷன் மஹானாமா ஆகியோர் புதிய மைதானத்தைக் கட்ட எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
கொழும்பில் ஏற்கெனவே கிரிக்கெட் மைதானம் ஒன்று உள்ளது. இங்குதான் பெரும்பாலான சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஏற்கெனவே நான்கு மைதானங்கள் உள்ள நிலையில் உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்துவதற்காகப் பெரிய கிரிக்கெட் மைதானம் ஒன்று தேவைப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதன்மூலம் உலகக் கோப்பை உள்ளிட்ட ஐசிசி போட்டிகளை நடத்த உரிமை கோர முடியும் என அறிவித்தது. ஆனால் உலகக் கோப்பைப் போட்டி உள்ளிட்ட ஐசிசி போட்டிகள் இலங்கையில் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன. இதனால் தற்போது உள்ள மைதானங்களைச் சீரமைப்பதற்குப் பதிலாக புதிய கிரிக்கெட் மைதானத்தைக் கட்ட முயல்வது ஏன் என ஜெயவர்தனே கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து ஜெயவர்தனே, மஹானாமா, குமார் சங்கக்காரா, மலிங்கா, ஜெயசூர்யா போன்ற வீரர்களை அழைத்து இந்த விவகாரம் குறித்து விவாதித்தது இலங்கை அரசு. இதன்பிறகு மைதானத்தைக் கட்டும் முடிவு கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.