திறமையான ஆஸி. சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஸாம்பாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தேர்வு செய்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ள கேன் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக திறமையான ஆஸி. சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஸாம்பாவை ஆர்சிபி அணி தேர்வு செய்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு அணியில் இன்னொரு லெக் ஸ்பின்னர் தேவை என உணர்ந்தோம். இதனால் ஸாம்பாவைத் தேர்வு செய்துள்ளோம். சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான சூழல் நிலவும் போது இந்தத் தேர்வு எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் கூறியுள்ளார்.
28 வயது ஸாம்பா, ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 55 ஒருநாள், 30 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.