யு.எஸ். ஓபன்: 7 வருடங்களுக்குப் பிறகு ஆடவர் முதல் சுற்றில் வென்ற இந்தியர்!

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வென்றுள்ளார்.
படம் - ஏபி
படம் - ஏபி
Published on
Updated on
2 min read

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வென்றுள்ளார்.

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டி காலி அரங்கில் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

பிரபல வீரர்கள் பலர் விலகியுள்ளதால் இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியின் முதல் சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் நேரடியாகத் தகுதி பெற்றார். 23 வயது சுமித், தரவரிசையில் 122-வது இடத்தில் உள்ளார். தரவரிசையில் தன்னை விடவும் ஆறு இடங்கள் குறைவாக உள்ள அமெரிக்காவின் பிராட்லி கிளானை யு.எஸ். ஓபன் முதல் சுற்றில் எதிர்கொண்டார். 

இந்த ஆட்டத்தில் 6-1, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சுமித் நாகல் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் கடந்த 7 வருடங்களில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் சுற்றை வென்ற முதல் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2013-ல் சோம்தேவ் தேவ்வர்மன் யு.எஸ். ஓபன் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருந்தார். 

சுமித் நாகல் தனது 2-வது சுற்றில் உலகின் நெ.3 வீரரான டொமினிக் தீமுடன் மோதுவார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய் தொற்றின் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அந்தந்த நாடுகளில் நடைபெற இருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, விம்பிள்டன் போட்டி இந்த ஆண்டு வரும் ஜூன் 29 முதல் - ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும், கரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் போட்டியை நடத்துவது தொடா்பாக கேள்வி எழுந்தது. இதையடுத்து இந்த வருட விம்பிள்டன் போட்டியை ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டது. மே 24- ஜூன் 7 தேதிகளில் நடைபெறவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி செப்டம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக உலகின் நெ.1 வீராங்கனை ஆஷ்லி பார்டி சமீபத்தில் அறிவித்தார். பிரபல வீரர் நடாலும் இந்த வருட யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக 2020-ல் நடைபெறவுள்ள டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகுவதாக பிரபல வீரர் ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார்.

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டிக்கான பரிசுத்தொகை குறைக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று தாக்கத்தால் இந்த வருடப் பரிசுத்தொகை 53.4 மில்லியன் டாலராகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 7.6 மில்லியன் டாலர் தொகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டென்னிஸ் வீரர்களுக்கு நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யு.எஸ். ஓபன் பட்டத்தை வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு 3 மில்லியன் டாலர் கிடைக்கும். இது கடந்த வருடத்தை விடவும் 850,000 டாலர் குறைவாகும். எனினும் முதல் சுற்றுக்கான பரிசுத்தொகை கடந்த வருடத்தை விடவும் 5% அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com