இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால், அயர்லாந்து அணி திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக அந்த அணி 91 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியில் கர்டிஸ் கேம்ஃபெர் மட்டும் நிதானம் காட்டி நம்பிக்கையளித்து வந்தார். ஆனால், மற்ற பேட்ஸ்மேன்கள் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அரைசதம் அடித்து விளையாடி வந்த அவர் 49-வது ஓவரில் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், சகிப் மஹ்மூத் மற்றும் டேவிட் வில்லே தலா 2 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் டாப்ளே தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும்.