தனக்கு கரோனா தொற்று உறுதியானதாக வெளியான செய்திகளை பிரபல வீரர் பிரையன் லாரா மறுத்துள்ளார்.
131 டெஸ்டுகள், 299 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய லாரா, 2006-ல் ஓய்வு பெற்றார். இந்நிலையில் பிரையன் லாராவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து இன்ஸ்டகிராமில் லாரா தெரிவித்ததாவது:
எனக்கு கரோனா தொற்று உறுதியானதாக வெளியான செய்திகளை நான் படித்தேன். அதைப் பற்றி தெளிவுபடுத்துகிறேன். இந்தச் செய்தி தவறானது மட்டுமல்லாமல், கரோனா அச்சுறுத்தல் நிலவும் இச்சூழலில் ஒரு சமூகத்தில் இந்தச் செய்தியின் மூலம் பதற்றத்தை உருவாக்கக் கூடாது.
இச்செய்தி தனிப்பட்ட முறையில் என்னைப் பாதிக்கவில்லை. ஆனால், பொறுப்பற்ற தவறான செய்தியால் என் வட்டத்தில் உள்ளவர்கள் வருத்தமடைந்துள்ளார்கள். இதுதான் எனக்குக் கவலையளிக்கிறது. பரபரப்புக்காக வைரஸ் தொற்றைப் பயன்படுத்தக்கூடாது. இப்போதைக்கு கரோனா பாதிப்பு விலகப் போவதில்லை. அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.