உசைன் போல்ட் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட கிறிஸ் கெய்லுக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்ற உசைன் போல்ட், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் தனது 34-வது பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினார் போல்ட். கெய்ல் உள்பட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட அந்த விழாவில் யாரும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை பரிசோதனை மேற்கொண்டதாகவும் அதில் கரோனா தொற்று தனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் போல்ட் கூறியுள்ளார். இதனால் ஜமைக்காவில் உள்ள தனது வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உசைன் போல்ட் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட கிறிஸ் கெய்ல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள கெயில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்வதற்காக துபைக்கு விரைவில் செல்லவுள்ளார்.