ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் விளையாடும்: சௌரவ் கங்குலி
By DIN | Published On : 29th February 2020 08:43 AM | Last Updated : 29th February 2020 08:43 AM | அ+அ அ- |

துபையில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் விளையாடும் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் சுழற்சி முறையில் நடத்தப்படும். அந்த வகையில் இந்த முறை ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்தவுள்ளது. ஆனால், இந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி அதில் பங்கேற்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
எனவே இந்தப் போட்டித் தொடர் துபைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, துபையில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் விளையாடும் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
துபையில் மார்ச் 3ஆம் தேதி நடைபெறவுள்ள ஆசியக் கிரிக்கெட் கௌன்சில் கூட்டத்தில் பங்கேற்க புறப்படும் முன் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இத்தகவலை கங்குலி உறுதிபடுத்தினார்.
கடந்த 2012-13ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் இணைந்து விளையாடின. அதன் பிறகு ஐசிசி நடத்தும் முக்கியப் போட்டித் தொடர்களான சாம்பியன்ஸ் டிராஃபி, உலகக் கோப்பை உள்ளிட்ட தொடர்களில் மட்டுமே இவ்விரு அணிகளும் இணைந்து விளையாடியுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...