புதிய அணுகுமுறையுடன் செரீனா வில்லியம்ஸ் இனி விளையாடுவார்: முன்னாள் வீராங்கனை நம்பிக்கை

கரோனா ஊரடங்கால் கிடைத்த ஓய்வைக் கொண்டு 24-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல செரீனா வில்லியம்ஸ் முயல்வார் என...
புதிய அணுகுமுறையுடன் செரீனா வில்லியம்ஸ் இனி விளையாடுவார்: முன்னாள் வீராங்கனை நம்பிக்கை

கரோனா ஊரடங்கால் கிடைத்த ஓய்வைக் கொண்டு 24-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல செரீனா வில்லியம்ஸ் முயல்வார் என முன்னாள் வீராங்கனை கிறிஸ் எவர்ட் கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் நடைபெற வேண்டிய விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரெஞ்சு ஓபன் போட்டியும் பல்வேறு டென்னிஸ் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் செரீனா வில்லியம்ஸ் பற்றி முன்னாள் வீராங்கனை கிறிஸ் எவர்ட் ஒரு பேட்டியில் கூறியதாவது:

கரோனா ஊரடங்கால் கிடைத்த ஓய்வை 24-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல செரீனா பயன்படுத்திக் கொள்வார். புதிய அணுகுமுறையுடன் விளையாட்டில் ஈடுபடுவார். நல்ல உடற்தகுதியுடன் உள்ளார். மீண்டும் விளையாடி கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல வேண்டும் என்கிற ஆர்வம் அவரிடம் உள்ளது. இது மற்ற வீரர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும். சவாலான காலக்கட்டங்களை கடந்துவிட்டதால் இனி அவர் போட்டிகளை எப்படி வெல்லப் போகிறார் என்று பாருங்கள் என்றார்.

38 வயது செரீனா வில்லியம்ஸ், கடைசியாக கலந்துகொண்ட 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளிலும் தோற்றுள்ளார்.

2017-ம் ஆண்டு நவம்பரில் திருமணம் செய்துகொண்டார் செரீனா வில்லியம்ஸ். அதே ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது 3 மாதம் கர்ப்பமாக இருந்தார். எனினும் துணிச்சலுடன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியனாகவும் ஆனார். இந்தப் பட்டத்தை வென்றதன் மூலம் 'ஓபன் எரா'வில் (1968-ல் அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அது முதலான காலமே "ஓபன் எரா' ஆகும்.) அதிக பட்டங்களை (23) வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார் செரீனா. முன்னதாக ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் செரீனா.

வெள்ளையர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த பணக்காரர்களின் விளையாட்டான டென்னிஸில் தொழில்முறை வீராங்கனையாக 1995-ல் செரீனா கால் பதித்தார். அப்போது அவருக்கு வயது 14. அதன்பிறகு அபாரமாக ஆடிய செரீனா 1998-ல் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். அந்தப் போட்டியின் 2-வது சுற்றில் தனது மூத்த சகோதரியான வீனஸிடம் தோல்வி கண்ட செரீனா, 1999-ல் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். அதன்பிறகு டென்னிஸ் உலகின் தவிர்க்க முடியாத வீராங்கனையாக உருவெடுத்த செரீனா, ஏறக்குறைய 6 ஆண்டுகள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com