கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த கால்பந்துப் பிரபலம்!
By எழில் | Published On : 26th March 2020 10:54 AM | Last Updated : 26th March 2020 10:54 AM | அ+அ அ- |

படம் - @SomaliFA
சோமாலியா நாட்டின் கால்பந்து வீரர் அப்துல்காதிர் முகமது ஃபரா, கரோனா வைரஸ் பாதிப்பால் லண்டனில் உயிரிழந்தார். அவருக்கு வயது 59.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 21,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 600 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சோமாலியா நாட்டின் கால்பந்துப் பிரபலம் அப்துல்காதிர், கரோனா வைரஸ் காரணமாக லண்டனில் உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் அவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்த முதல் ஆப்பிரிக்க கால்பந்து வீரராகியுள்ளார்.
1961-ல் பிறந்த அப்துல்காதிர், 1976 முதல் கால்பந்து விளையாட்டை தொழில்முறையாக விளையாடி வந்தார். சோமாலியாவின் பட்ரூல்கா கால்பந்து கிளப்பில் 1980களின் இறுதி வரை விளையாடினார். கடந்த நான்கு வருடங்களாக சோமாலிய அரசின் விளையாட்டுத்துறை ஆலோசகராக அவர் பணியாற்றினார். அப்துல்காதிரின் மறைவுக்கு சோமாலியா கால்பந்து சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.