ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதற்காக சச்சினிடம் ஆஸ்திரேலிய பேட் தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்பார்ட்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், விளையாட்டு சார்ந்த பொருள்களைத் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் பேட்களில் சச்சினின் பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்தி விளம்பரம் செய்யவும் சச்சின் பை ஸ்பார்ட்டன் எனக் குறிப்பிட்டுள்ள பேட்களை விற்பனை செய்யவும் 2016-ல் சச்சினுடன் ஆண்டுக்கு 1 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்நிலையில் ஒப்பந்தப்படி தொகையைத் தராததால், ஸ்பார்ட்டன் நிறுவனம் தனது பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது எனக் கடந்த வருடம் தெரிவித்தார் சச்சின் டெண்டுல்கர். இதுதொடர்பாக அந்நிறுவனத்துக்கு சச்சின் கடிதம் எழுதியும் பதில் வராததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
தனக்குச் சேரவேண்டிய 2 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ. 15.11 கோடி) வழங்க உத்தரவிடக் கோரி ஆஸ்திரேலிய ஃபெடரல் நீதிமன்றத்தில் சச்சின் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் சச்சின் தொடர்ந்த வழக்கில் இருதரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இத்தகவலை ஸ்பார்ட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. சச்சினுக்குச் சேரவேண்டிய தொகை வழங்கப்படவில்லை. சச்சினுடனான ஒப்பந்தம் 2018 செப்டம்பர் 17-ம் தேதியுடன் முடிவடைந்தது, ஆனால், ஒப்பந்தத்தை மீறி அவருடைய பெயர், புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஸ்பார்ட்டன் நிறுவனம் சச்சினிடம் மன்னிப்பு கோருகிறது. இந்த வழக்கை முடித்துவைத்ததற்காக சச்சினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று ஸ்பார்ட்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.