இதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தான் நலமுடன் உள்ளதாக இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
நெஞ்சுவலி காரணமாக வியாழக்கிழமை நள்ளிரவு புதுதில்லி ஃபோா்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கபில்தேவுக்கு வெள்ளிக்கிழமை இதய அறுவைச் சிகிச்சை (ஆஞ்சியோ பிளாஸ்டி) நடைபெற்றது.
61 வயதான கபில்தேவ், கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டா்களில் ஒருவராக கருதப்படுகிறாா். 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமையேற்றதுடன் இந்தியாவுக்கு முதல் முறையாகக் கோப்பையையும் பெற்றுத் தந்தாா். இந்திய அணிக்காக 131 டெஸ்டுகள், 225 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 1994-ல் கடைசியாக விளையாடினார்.
வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவா் தில்லியில் உள்ள ஃபோா்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள் அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவைச் சிகிச்சை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனா். இதையடுத்து, அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
தற்போது அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறாா். அவரை டாக்டா் அதுல் மாத்தூா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா். அவா் குணமடைந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் டிஸ்சாா்ஜ் செய்யப்படுவாா் எனத் தெரிகிறது.
இதய அறுவைச் சிகிச்சை முடிந்த கபில் தேவ், 1983 உலகக் கோப்பையில் விளையாடிய இந்திய அணிக் குழுவினரின் வாட்சப் குழுவில் உரையாடியுள்ளார். நான் நலமுடன் உற்சாகமாக உள்ளேன். விரைவில் குணமடைந்து விடுவேன். கோல்ப் விளையாட ஆவலாக உள்ளேன் என கபில் தேவ் தகவல் தெரிவித்துள்ளார். இந்த உரையாடல் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.