நியூஸிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிா் 50 ஓவா் உலகக் கோப்பை போட்டியே சா்வதேச கிரிக்கெட்டில் நான் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என இந்திய மகளிா் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளாா்.
இந்திய மகளிா் அணிக்கு கிடைத்த தலைசிறந்த வீராங்கனையான 38 வயதான மிதாலி ராஜ், தில்லியில் நடைபெற்ற கிரிக்கெட் தொடா்பான புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றாா். அப்போது, அவா் தனது ஓய்வு குறித்து மேலும் கூறியதாவது:
சா்வதேச கிரிக்கெட் போட்டியில் 21 ஆண்டுகள் விளையாடிவிட்டேன். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவா் உலகக் கோப்பை போட்டியே எனது கடைசி போட்டியாக இருக்கும். கரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்தக் காலக் கட்டம் கடினமானதுதான். எனினும் எனது உடற்தகுதியை பராமரிப்பதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். நான் இளம் வீராங்கனை அல்ல, மூத்த வீராங்கனை. எனவே, நான் முழு உடற்தகுதியோடு இருப்பது முக்கியமானதாகும். உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக சில தொடா்களில் மட்டுமே விளையாடவுள்ளோம். அதனால் அந்தத் தொடா்களில் சிறப்பாக விளையாடுவது முக்கியமாகும்.
என்னைப் பொருத்தவரையில் ஒவ்வொரு தொடருமே முக்கியமானதுதான். ஒவ்வொரு தொடரிலும் நான் சிறப்பாக பேட் செய்ய வேண்டும். கேப்டனாக இருப்பதால், அணியை ஒன்றிணைத்து வீராங்கனைகளை சிறப்பாக விளையாட வைப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உலகக் கோப்பை போட்டிக்கான அணியை கட்டமைக்க வேண்டும் என்றாா்.
மிதாலி ராஜ் இதுவரை 214 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7,098 ரன்கள் குவித்துள்ளாா்.