ஃபவாத் அலாம் சதம்: தென் ஆப்பிரிக்காவுக்குப் பின்னடைவு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஃபவாத் அலாம் சதமடிக்க 2-வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் குவித்துள்ளது.
ஃபவாத் அலாம் சதம்: தென் ஆப்பிரிக்காவுக்குப் பின்னடைவு
Updated on
2 min read


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஃபவாத் அலாம் சதமடிக்க 2-வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் குவித்து 88 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் கராச்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்து திணறல் நிலையில் இருந்தது. அசார் அலி 5 ரன்களுடனும், ஃபவால் அலாம் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. உணவு இடைவேளை வரை இருவரும் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் 71 ரன்கள் எடுத்து நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். உணவு இடைவேளையில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. அலி 38 ரன்களுடனும், அலாம் 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, உணவு இடைவேளைக்குப் பிறகு இருவரும் அரைசதத்தை எட்டினார். ஆனால், அசார் அலி அரைசதம் அடித்த கையோடு 51 ரன்களுக்கு கேசவ் மகாராஜ் சுழலில் ஆட்டமிழந்தார். இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தது. 

தொடர்ந்து களமிறங்கிய முகமது ரிஸ்வான் அலாமுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். எனினும் பெரிய ஸ்கோராக மாற்றாமல் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ரிஸ்வான்.

இதன் மூலம், தேநீர் இடைவேளையின்போது பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 42 ரன்கள் பின்தங்கியிருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகும் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து அலாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம், பாகிஸ்தான் அணியும் முன்னிலைப் பெற்றது. 7-வது விக்கெட்டுக்கு அலாமும் ஃபஹீம் அஷ்ரப்பும் 102 ரன்கள் சேர்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடியளித்தனர்.

அலாம் 109 ரன்கள் எடுத்திருந்தபோது லுங்கி என்கிடி பந்தில் ஆட்டமிழந்தார். 2-ம் நாள் ஆட்டம் முடிவதற்கு முன்பு அரைசதம் அடித்து விளையாடி வந்த அஷ்ரபை அன்ரிச் நோர்க்கியா வீழ்த்தினார்.

இதையடுத்து, ஹசன் அலி மற்றும் நௌமன் அலி 2-ம் நாள் ஆட்டநேரம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து 88 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஹசன் அலி 11 ரன்களுடனும், நௌமன் அலி 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்க்கியா, லுங்கி என்கிடி மற்றும் கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com